பேராவூரணி : பேராவூரணியில் ரயில்வேகேட் சாலையின் நடுவே உள்ள மெகா பள்ளம் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயில் எதிரே உள்ள ரயில்வேகேட் சாலை பேராவூரணி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், மறியல், பொதுக்கூட்டம், போராட்டங்கள் நடைபெற்றாலும் மாற்றுப்பாதையாக உள்ளது. மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் இந்தப்பாதையின் வழியாக பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்பட அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்லமுடியும்.
மேலும் கல்லூரி, தனியார் பள்ளி பேருந்துகள், கட்டுமானப்பொருட்களுடன் அதிக எடையுடன் ஜல்லி, சிமென்ட் ஏற்றிச்செல்லும் லாரிகள், கல்லூரி, பள்ளிகளுக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். முக்கியமான இந்த சாலையில் ரயில்வேகேட் அருகில் சாலை சிறிய பள்ளமாக இருந்தது. உடனடியாக அதை சரிசெய்யாததால் சாலையின் 15 அடி அகலத்திற்குமேல் மெகா பள்ளமாக மாறியது.
சாலையை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து கண்டுகொள்ளாத ரயில்வேதுறை என விரிவான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாகஉடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மெகாபள்ளத்தை மூடியதோடு, போக்குவரத்துக்கு வசதியாக சாலையை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.